Thursday, January 31, 2013

ஆட்டகளம்


கடவுள் தோளில் சுமந்து வந்து
இங்கே விளையாடி விட்டு வா
என்று ஆசி கூறி மறைந்தார்

விளையாட்டு விதிகள் அச்சடிப்பு :

"இருப்பதை கெட்டியாக பிடித்துக் கொள் - என்றாலும்
இருக்கிற எதற்கும் மதிப்பு இருக்காது
இல்லாத ஒவ்வொன்றுக்கும் அவமதிப்பு தப்பாது"

விதிபடி விளையாட ஆரம்பித்தேன்
ஆட்டம் நிற்பதாகவும் தெரியவில்லை
சிலநேரங்களில் விளையாடவும் தெரியவில்லை

முதல் ஆட்டத்தின் அம்பு வேட்டையரிடம்
தற்போதைய ஆட்டத்தில் எல்லோரிடத்திலும்
தப்பித்து தாண்டினால் புள்ளிகள் கூடும்

சொரிந்து சொரிந்து காட்ட வேண்டியதாகியது
குரங்கு தான் என்று நிரூபிக்க - இல்லையெனில்
நான் வெளியேற்றப்படக் கூடும்

ஆதிகால வேட்டை விளையாட்டின் நெடி
தலையணை உறையிலும் கசிந்தது
ஆழ்ந்து உறங்கலாம் என்றாலும்

சும்மா இருந்த என்னை
இங்கே இறக்கிவிட்டுச் சென்று விட்டவரை
கடவுள் என்று எப்படி சொல்கிறேன்?


நன்றி : கீற்று (31-Jan-2013)
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=22815&Itemid=139

Monday, January 28, 2013

கவிதை பக்கம்

கவிதை பக்கம்
காலியாக சிலகாலம்
கவிதையான நிகழ்வுகளும்
குறைவான காலம்


திடீரென பள்ளிகூட அலுமினி கூட்டம் -
பழைய சினேகிதிகள் ஒவ்வொருவராய்
பேச்புக்கில் கண்டுபிடிப்பு - சபை நிறைந்தது
பேச்புக் கூட்ட பக்க உரையாடல்
பள்ளிகூட வராந்தாவாக சலசலப்பு


பலவருடத்திற்கு பிறகு புகைபடத்தில்,
அவளா இவள் ? இவளா அவள் ?
ஆறுவித்தியாச துணுக்காக
நினைவுகளும்,நிஜங்களும்..


சிரிக்க வைத்தவள்,சீண்டியவள்
சிணுங்கியவள்,கலகலத்தவள் -
ம்றுபடியும் பார்க்கையில்,
தீக்குச்சி நெருப்பென சீண்டப்பட்ட
நிகழ்வுகளும் மறைந்து போனது


காலை முதல் மாலை வரை
வாழ்க்கை முழுவதற்கும் சேர்த்து
சிரித்தது போல் சிரித்தது...
பாட நேரத்தில் ஆசிரியர் அசைவுகளை
கவனமாக கவனித்து - மதியஉணவுடன்
சேர்த்து அரைத்து சிரித்தது...


நினைவுகள் யாவும்
பள்ளி வராந்தா  ஒலியாக
உடம்பு முழுதும் பரவியது..
இக்குதுகூலம் கவிதை இல்லையெனில்
வேறு எது கவிதையாக கூடும்?

- சித்ரா
(k_chithra@yahoo.com)

நன்றி : திண்ணை (28-Jan-2013)
http://puthu.thinnai.com/?p=18076